பதிவு செய்த நாள்
28
ஏப்
2020
10:04
சென்னை: ஊரடங்கால் தமிழக கோயில்கள் கோடிக்கணக்கில் வருமான இழப்பை சந்தித்த போதும், பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மார்ச் 24ம் தேதி முதல் கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், கோயில்களுக்கு வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு கோயில்களிலும் ஏழைகளுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சென்னையில் ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி ஆண்டவர் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் உண்டியல் வருமானம் பாதிப்பை சந்தித்துள்ளன. இருப்பினும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த திட்டமான, பக்தர்களின் காணிக்கையிலிருந்து அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 150 முக்கிய கோயில்களில், பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தாததால், வருமானம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோயில்களில் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே இழப்பை மதிப்பிட முடியும். இவ்வாறு கூறினர்.