பதிவு செய்த நாள்
04
ஆக
2020
11:08
சென்னை:ராமர் கோவில் பூமி பூஜை விழாவில், அனைவரும் இருந்த இடத்திலேயே,108 முறை, ராம மந்திரத்தை ஜெபித்து, ஆத்மார்த்தமாக பங்கேற்று, பிரார்த்தனை செய்வோம், என காஞ்சி மடாதிபதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம்அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை, நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:காஞ்சி சங்கர மடம், காமாட்சியம்மன் கோவில்,ஏகாம்பரநாதர், மாமரத்தடிபெருமாள் கோவில், விஷ்ணு காஞ்சி ஆகிய இடங்களில்இருந்து, புனித மண் சேகரிக்கப்பட்டு, விமானத்தில்அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.பூமி பூஜைக்கு தேவையான வாஸ்து பொருளான, காஞ்சிபுரம், சங்குபாணி விநாயகர் கோவிலில் இருந்து, மரத்தினால் செய்யப்பட்ட கருங்காலி காதீரம், புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, இரண்டு செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பூமி பூஜைக்கு உபயோக படுத்தக்கூடிய, ஜெயா, நந்தா, பத்ரா, பவித்ரா, பூர்ணா பூஜை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ராமர், தமிழகத்தில் சஞ்சாரம் செய்துள்ளார். சீதாதேவிக்கு ராமேஸ்வரம் ஷேத்ரத்தை காண்பித்து, அதன் பெருமையை விளக்கி இருக்கிறார்.தமிழகத்தில், பல ராமர் கோவில்கள் சிறப்பாக அமைந்துள்ளன. பல ஊர்களின் பெயர்கள், ராமாயணத்துடன் தொடர்புடையதாக உள்ளன.
காஞ்சி அடுத்த திருப்பக்குழி, ராமபிரான் ஷேத்ரமாக விளங்குகிறது.தமிழகத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு, மேலும் வலுப்பெற, இந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்;நாம் பூஜிக்கும் காமதேனுவான கோமாதாவை பாதுகாக்க வேண்டும் என்பது, ஜெயேந்திரரின் விருப்பம். அயோத்தியில் நடக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில், மக்கள் இருந்த இடத்திலேயே ஆத்மார்த்தமாக பங்கேற்று, 108 முறை, ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் ராம மந்திரத்தை ஜெபித்து, பிராத்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.