பதிவு செய்த நாள்
21
அக்
2020
10:10
பூஜை நேரம்: மாலை 5:00 முதல் இரவு 7:00 வரை
ஸ்ரீமந்நாராயணனின் சக்தியாக இருப்பவள், மஹாலட்சுமி. தம் மார்பில் வைத்துப் போற்றுகிறார் மஹாவிஷ்ணு. அதுவே, அவரது மார்பில் ஒரு மங்கள அடையாளமாக உள்ளதால், லக் ஷ்மீ எனப் போற்றப்படுகிறாள். லக்ஷ்ம என்றால் அடையாளம்; பெண்பாற் சொல்லில் லக் ஷ்மீ என்ற சொல்லாகியது. அகில உலகங்களுக்கும், ஐஸ்வர்யங்களை வழங்கும் அம்பிகையாக, ஸ்ரீ மஹாலக்ஷ்மீ அருள்பாலிக்கிறாள்.ஐஸ்வர்யம் என்றால் ஈஸ்வரனுடையது என்று பொருள். சுவாமியை, சிவனாக, விஷ்ணுவாக பெண் தெய்வ வடிவாக, இப்படி ஏதாவது ஒரு நிலையில் வழிபட்டால் தான், ஈஸ்வரனுடைய ஐஸ்வர்யம் அதாவது, லக்ஷ்மீ கடாட்சம் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் துாய்மை, பக்தி, பிறருக்கு உதவும் கருணை, தெய்வ வழிபாடு போன்றவை இருக்கிறதோ, அங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்கிறாள். அதாவது, அங்கு செல்வ வளம், ஆரோக்கியம், இல்லற சுபிட்சம், வம்ச விருத்தி போன்ற, எல்லா மங்களங்களும் நிறைந்திருக்கும்.
சூரிய உதய, அஸ்தமன காலத்தில், விளக்கேற்றி வழிபடாமல் துாங்குவது, வசிப்பிடத்தை துாய்மை செய்யாமல், குப்பைக் கூளமாக வைத்திருப்பது, நகம் கடிப்பது, பெரியவர்களையும், மகான்களையும் அவமதிப்பது போன்ற, செய்யக்கூடாத செயல்களைச் செய்யும் இடத்தை விட்டு, லக்ஷ்மீ அகன்று விடுவாள். இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால், விஷ்ணுவாகவே இருந்தாலும், அம்பிகை அகன்று விடுவாள் என, நீதி நுால் கூறுகிறது.தேவலோகத்தை ஆளும் இந்திரன், சகல ஐஸ்வர்யங்களும் உடையவர். கேட்டதையெல்லாம் தரக்கூடிய கற்பக மரமும், காமதேனுவும், இன்னும் பிற செல்வங்களும் அவரிடம் தான் இருக்கும். ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற தேவலோக அழகியர், அவரது சபையில் நாட்டியமாடும் பணி செய்வர். பிருகஸ்பதி எனப் போற்றப்படும், மகாஞானியாகிய தேவகுரு, அவரது ராஜகுருவாக இருந்து, ஆலோசனை வழங்குவார். இல்லாதது என எதுவுமே இல்லாத அளவிற்கு, சகல சவுபாக்கியங்களும், ஸ்ரீ மஹாலக்ஷ்மீ கடாட்சத்தால் பெற்று, தேவலோகத்தை ஆண்டு வந்த தேவேந்திரனுக்கும், போதாத காலம் வந்தது.
ஒரு சமயம், தம் சபையில் நடனமாடும் பேரழகியாகிய ஊர்வசியுடன், பூந்தோட்டத்தில் சல்லாபம் செய்து மகிழ்ந்திருந்த இந்திரனைக் காண, துர்வாச முனிவர் வந்தார். சிவ பிரசாதமாக ஒரு பாரிஜாத மாலையை இந்திரனுக்கு அளித்தார். காமக் களியாட்டத்தால் ஆணவம் பெருகி, மதியிழந்திருந்த இந்திரன், முனிவரையும் மதிக்காமல், பிரசாதத்தையும் மதிக்காமல், அம்மாலையை, தம் பட்டத்து யானையாகிய ஐராவதத்தின் மீது வீசினான்; யானை மேல் அம்மாலை பட்ட மாத்திரத்தில், இந்திரனின் சகல ஐஸ்வர்யங்களும் அவனை விட்டு விலகி, யானை வடிவிலேயே காட்டிற்கு ஓடி விட்டது.
துர்வாச முனிவரும் அதிக கோபம் கொண்டு, உன் ஆணவத்தால் இந்திர பதவியை இழப்பாயாக... உன் தலைநகராகிய அமராவதிப் பட்டிணம், இனி அரக்கர் வசமாகக் கடவது... என, சபித்து வெளியேறி விட்டார்.செய்வதறியாது திகைத்த இந்திரன், தன் நகரம் திரும்பினான்; முனிவர் சாபம் பலித்ததால், தேவர்கள் யாருமே இல்லை; எங்கும் தீயசக்திகள். மங்களம் இல்லாத சத்தங்களும், சூழலுமாக மாறியிருந்தது. புத்தி தெளிந்த இந்திரன், தன் குருவாகிய தேவகுருவை அடைந்து, நடந்த விஷயங்களைக் கூறி, அழுதான்.தேவகுரு அவன் மீது இரக்கம் கொண்டு, லக்ஷ்மீ வாசம் செய்ய விரும்பும் இடங்களையும், விரும்பாத இடங்களையும் விளக்கி, சிவ அபராதமும், குரு அபராதமும் சேர்த்துச் செய்து, நீ மகாபாவியாகி விட்டாய்; இதற்குப் பரிகாரம் கூறுவதே தவறு.
இருப்பினும், நீ என் சீடன் மட்டுமின்றி, தேவலோக அரசனாகவும் இருக்கிறாய். லட்சம் முறை பஞ்சாட்சர மகாமந்திரம் ஜபம் செய்து, முதலில் உன்னைத் துாய்மையாக்கிக் கொண்டு வா. பின் யோசிப்போம்... என்று அனுப்பி விட்டார். இந்திரனும், கங்கையில் மூழ்கி, குருநாதர் உபதேசித்த முறைப்படி பஞ்சாட்சரம் ஜபித்து, குரு இருப்பிடம் மீண்டான்.தேவகுருவும், தேவலோகம் சுபிட்சம் பெறவும், இந்திரனுக்கு லக்ஷ்மியின் அருள் மீண்டும் கிட்டவும், ஸ்ரீஜகன்மாதாவாகிய லக்ஷ்மீ பூஜையையும், நவராத்திரி விரத மகிமையையும் உபதேசித்தார்.
இந்திரனே... சகல உலகங்களையும் ஆளும் பராசக்தியே, துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி எனும் பல பெயர்களிலும், உருவங்களிலும் தோன்றி, படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் புரியும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் ஆகியோரின் சக்தியாகி அருளுகிறாள். தீய சக்திகளை அழிக்க துர்கையாகவும், வழிபடும் பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் அருள லக்ஷ்மியாகவும், எல்லாருக்கும் நல்லறிவைத் தரும் சரஸ்வதியாகவும் இருப்பவள் அவளே. நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து, மதுகைடபர், மஹிஷாசுரன் போன்ற கொடிய அரக்கர்களை அழித்தும், தேவர் முதலிய மூவுலகத்தோருக்கும், இன்னருள் புரிந்தும், கல்வியறிவும், மெய்ஞானமும் வழங்கியதால், நாமும் அந்த அன்னையை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக, நவராத்திரி நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
அப்படி வழிபட்டால், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்கள் அகலும். சாபத்தாலும், பிறரது கோபத்தாலும் மற்றும் பிறரால் ஏமாற்றப்பட்டும், இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம். புத்தித் தடுமாற்றம் ஏற்பட்டு, சுயநினைவிழத்தல், ஞாபக மறதி, படிப்பு வராமை போன்றவை அகன்று, நல்லறிவும், சத்புத்தியும் ஏற்படும். எனவே, நீ அந்த பராசக்தியை நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையாகவும், இரண்டாவது மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுவாயாக. உனக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கும்; மீண்டும் இந்திரலோகம் கிடைத்து, இழந்த ஐஸ்வர்யங்கள் உன்னை வந்தடையும்... எனக்கூறி, மஹாலக்ஷ்மி வழிபாட்டு முறைகளையும் உபதேசித்தார்.
இந்திரனும் அவ்வாறே விரதம் இருந்து நவராத்திரி வழிபாடு செய்தான். அம்பிகையின் அருளால், துர்வாச முனிவரே வந்து சாபம் நீக்கியருளினார்.
அமராவதிப்பட்டிணத்திலிருந்தும் அரக்கர்கள் வெளியேறி, பாதாளலோகம் சென்றனர். இந்திரலோகம் மீண்டும் புத்தொளி பெற்றது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி தன் கடைக்கண்களை நோக்கி, சகல ஐஸ்வர்யங்களையும்இந்திரனுக்கு வழங்கினாள். சிவ அபராதம், குரு அபராதம் நீங்கப் பெற்று, ஆணவம் முதலியன நீங்கி, இந்திரனும் மகிழ்ச்சியுடன் தேவலோகத்தை ஆளத் துவங்கினான். இவ்வரலாற்றைக் கேட்பவர்களும், படிப்பவர்களும் சகல செல்வங்களும் பெறுவர். கடன் தொல்லை இன்றி, வறுமை நீங்கப் பெறுவர். பிறரிடம் ஏமாந்த பணம், மீண்டும் கைக்கு வந்து சேரும்.
பூஜிக்கும் முறை: தாம்பாளத்தில், நடுவில் அறுகோணமும், சுற்றிலும் பதினாறு இதழ் தாமரையுமாகக் கோலமிட்டு அலங்கரித்து, நடுவில் குத்து விளக்கேற்றியும், அறுகோணத்திலும் பதினாறு இதழ்களிலும், அகல் விளக்குகள் ஏற்றியும், ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நமஹ... என்று, அர்ச்சனை செய்யவும்.
நிவேதனம் : இந்த சுலோகம் சொல்லி புஷ்பம் சாத்தி, பால் அன்னம், பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து, தீபாராதனை செய்து, தெரிந்த பாடல்களைப் பாடலாம்.
பெண்களுக்கு : சுமங்கலிகளுக்கு சிகப்பு ரவிக்கைத் துண்டு மற்றும் மங்களப் பொருட்கள் வழங்கி, அம்பாளுக்கு ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்யவும்.
சுலோகம்
லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்ரராஜ தநயாம்
ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்|
தாஸீபூத ஸமஸ்த தேவவனிதாம்
லோகைக தீபாங்குராம்||
ஸ்ரீமன்மந்தகடாக்ஷ லப்தவிபவாம் ப்ரம்
ஹேந்த்ர கங்காதராம்|
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸி
ஜாம் வந்தே முகுந்தப்ரியாம்||- ஸ்ரீமகாலக்ஷ்மி தியானம்
மகாலக்ஷ்மி பாற்கடலில்
உதித்தவள். அலைமகள் எனப் பெயர் பெற்றவள். ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளும் இடமே வாஸஸ்தலமாக உடையவள். தேவலோகப் பெண்கள் அனைவரும் பணிவிடை செய்ய மகிழ்ந்திருப்பவள். இவ்வுலகிற்கு ஐஸ்வர்யம் எனும் ஒளி தருபவள். பிரமன், ருத்ரன், இந்திரன் முதலியோர் அவளது கடைக்கண்பட்ட மாத்திரத்தில் சகல போகங்களையும் அடைந்தனர். மூவுலக நாயகனாகிய முகுந்தனின் ப்ரியநாயகியாகிய உன்னை வணங்குகிறோம். சகல செல்வங்களும் அருளுவாயாக!
நவராத்திரி ஆறாம் நாளுக்கான நிவேதனம்: நவராத்திரிக்கு நிவேதன உணவு செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத் சொல்லிக் கொடுப்பார். சீதாராம் பிரசாத்
பால் சாதம்!
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 200 கிராம்
பால் - 100 மில்லி
சர்க்கரை - 100 கிராம்
நெய் - 1 தேக்கரண்டி
சுக்கு - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
அரிசியை குழைய வைத்து, ஆறிய பின் மசிக்கவும். இதில், வெதுவெதுப்பான பால், சர்க்கரை, சுக்கு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்aளவும். தளர்ந்து வரும் வரை, பால் சேர்க்கவும். இதில், நெய் சேர்த்து பரிமாறவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 1,237.6; கார்போஹைட்ரேட், 261.7; புரதம், 19.1; கொழுப்பு, 10.4.
பாசிப்பருப்பு சுண்டல்!
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 500 கிராம்
எண்ணெய் - 10 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய கேரட் - 10 கிராம்
துருவிய வெள்ளரி - 10 கிராம்
துருவிய தேங்காய் - 50 கிராம்
செய்முறை: பாசிப்பருப்பை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய், துருவிய கேரட் மற்றும் வெள்ளரி சேர்த்து இறக்கவும்.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2,035.7; கார்போஹைட்ரேட், 281.7; புரதம், 126.1; கொழுப்பு, 40.5.
சர்க்கரை பொங்கல்!
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 200 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 400 கிராம்
முந்திரி - 30 கிராம்
காய்ந்த திராட்சை - 30 கிராம்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
செய்முறை: பச்சரிசி, பாசிப் பருப்பை தனித்தனியாக வறுக்கவும். ஒன்றாக சேர்த்து வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, கரைந்ததும் வடிகட்டி, அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். இதை, அரிசி - பருப்பு கலவையுடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து, ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 3,065.4; கார்போஹைட்ரேட், 572.1; புரதம், 50.32; கொழுப்பு, 116.9.மூன்று நிவேதனங்களும், தலா, ஐந்து பேர் சாப்பிடக் கூடிய அளவில் உள்ளது. :--ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்மயிலாடுதுறை