பதிவு செய்த நாள்
30
நவ
2020
02:11
திருச்சி: திருச்சி, மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
தென் கயிலாயம் என போற்றப்படும் திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தினத்தன்று, 273 அடி உயரமுள்ள மலைக்கோட்டை உச்சியில், பிள்ளையார் கோவிலுக்கு அருகில், கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.கடந்த, 27ம் தேதி, மலை மீது வைக்கப்பட்ட கொப்பரையில், 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரித்த திரியை ஊற வைத்தனர்.
கார்த்திகை தீபத் திருநாளான நேற்று மாலை, 5:30 மணிக்கு, தாயுமானவ சுவாமி கோவிலில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பரணி தீபம் ஏற்றப்பட்டது.தொடர்ந்து, மேள தாளம் முழங்க, அதிலிருந்து தீப ஜோதியை, மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். மாலை, 6:00 மணிக்கு, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வைக்கப்பட்ட கொப்பரையில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதை தரிசித்த பின், திருச்சி மாநகர பகுதி மக்கள், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.கொரோனா காரணமாக, கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, நேற்று மாலை, 3:00 மணி முதல், கோவிலில், தீப தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல, பழநி, திருப்பரங்குன்றம் உட்பட பல்வேறு கோவில்களிலும் நேற்று, கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.