பதிவு செய்த நாள்
16
டிச
2020
12:12
மேட்டுப்பாளையம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. சுவாமி முன்பு ஸ்தலத்தார் மற்றும் அர்ச்சகர்கள் பாசுரங்களை சேவித்தனர்.
காரமடையில், மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று, கோவிலில், பகல் பத்து உற்சவம் துவங்கியது. காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், திருமஞ்சனம் நடந்தது. காலசந்தி பூஜை முடிந்தவுடன், அரங்கநாத பெருமாள் மட்டும், சிறப்பு அலங்காரத்தில், கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து, ரங்க மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் சுவாமி முன்பு, திருமங்கை ஆழ்வார் அருளிய, திருமொழி, கோவில் திருமொழி மற்றும் திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் ஆகிய பாசுரங்களை சேவித்தனர். அதன்பின்பு மங்கள ஆராத்தியுடன் பகல்பத்து முதல் நாள் நிகழ்ச்சி, நிறைவடைந்தது. இந்த பூஜைகளில் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) கைலாசம், மிராசுதாரர்கள், ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி வரை சுவாமி முன்பு ஸ்தலத்தார், அர்ச்சகர்கள் ஆகியோர் திருமொழி பாசுரங்களை சேவிப்பர்.