பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
மயிலாப்பூர்: மார்கழி இசை கச்சேரி ரசிகர்களில், ருசி பிரியர்களுக்காக, ’கேண்டீன்’ துவங்கப்பட்டுள்ளது. சபாக்களின் சுவாரஸ்யத்தை, இனி வீட்டிலேயே ருசிக்கலாம்.மார்கழி மாதம் என்றாலே, மயிலாப்பூரில் உள்ள சபாக்களில், காலை முதல் இரவு வரை இசை நிகழ்ச்சிகள் அணிவகுக்கும்.வெளிநாடுகளில் இருந்தும், இசைக்கலைஞர்களும், ரசிகர்களும் படையெடுப்பர். சபாக்களில், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.இசை விழாக்களை போலவே, அந்தந்த சபாக்களில், ’கேண்டீனில்’ விற்பனை செய்யப்படும் விதவிதமான அறுசுவை உணவுகளுக்கும், தனி ரசிகர் பட்டாளம் உண்டு.இந்த ஆண்டு, கொரோனா பரவல் அச்சத்தால், சபாக்களில் ரசிகர்கள் பங்கேற்கும் நேரடி இசை கச்சேரிகள் இல்லை. ஆனால், இணையதளம் வழியாக கச்சேரிகள் நடக்கின்றன. ரசிகர்கள் வீட்டில் இருந்தே, கச்சேரிகளை ரசிக்கின்றனர். ஆனால், அவர்கள் தவறவிடுவது, சபாக்களில் கிடைக்கும் திண்பண்டங்களை தான்.இதற்கும் மாற்றி யோசித்து வழி கண்டுபிடித்துள்ளனர். இசை ரசிகர்கள், நேடியாக கேண்டீன் வந்து, உணவை ருசிக்கவும், அதே நேரம் வீட்டில் இருந்த படியே இந்த வசதியை பெறவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ’ஆன் - லைனில்’ கச்சேரியை ரசித்த படியே, இனி கேண்டீன் உணவையும் சுவைக்கலாம். ’வாட்ஸ் ஆப்’ மூலம் ஆர்டர் செய்தால், வீடு தேடி உணவு வரும்.
மயிலாப்பூர், முசிறி சுப்பிரமணியம் சாலையில் உள்ள, ’மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்’பில் பிரத்யேகமான மார்கழி நேரடி கேண்டீன் என்ற பெயரில், உணவு திருவிழாவை, நேற்று முன்தினம் நல்லி குப்புசாமி துவக்கி வைத்தார். ஜன., 3 வரை உணவு திருவிழா நடக்க உள்ளது. இங்கு கிடைக்கும் உணவு வகைகளை, வீட்டிற்கு வரவழைத்தும் சாப்பிடலாம்.இது குறித்து, போரூர், ’சாஸ்தா கேட்டரிங் சர்வீஸ்’ நிறுவன தலைவர், வெங்கடேஷன் கிருஷ்ணன் கூறியதாவது:நான்கு ஆண்டுகளாக, பிரம்ம கான சபாவில், எங்கள் கேண்டீனில், இசை ரசிகர்களின், நா சுவைக்கு விருந்து படைத்தோம். தற்போதைய சூழ்நிலையில், சபாக்களில் கேண்டீன் அமைக்க முடியாததால், மாற்று ஏற்பாடாக, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து, இந்த உணவு திருவிழா நடத்துகிறோம்.
★ காலை, 7:30 -- 10:30 மணி வரை, 19 வகையான சிற்றுண்டி
★ மதியம், 11:30 -- 2:30 மணி வரை, வாழை இலையில் கல்யாண சாப்பாடு என்ற பெயரில் தினமும் விதவிதமான, 26 வகையான உணவுகள்* புத்தாண்டு தினத்தன்று, சிறப்பு மதிய உணவாக, இரண்டு வகையான கேரள பாயாசத்துடன், 36 வகையான உணவுகள் பரிமாறப்படும்
★ மாலை, 3:30 -- 7:30 மணி வரை, வடை, போண்டா, வெத்தலை பஜ்ஜி உள்ளிட்ட நொறுக்கு தீனிகள்
★ இரவு 7:30 -- 9:30 மணி வரை, ஏழு சுவைகளில் ஊத்தாப்பம், கோதுமை ரவா, பொங்கல், வித விதமான தோசைகள், அடை அவியல். அத்துடன், சப்போர்ட்டா கேசரி, அசோகா, பாதாம், குல்கந்த் காசி அல்வா, லிச்சி பாசாந்தி உள்ளிட்ட இனிப்பு உணவு வகைகள்இந்த உணவு திருவிழாவில், வாடிக்கயைாளர்கள் நேரடியாக அமர்ந்து சாப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 63693 53037 என்ற மொபைல் எண்ணில், ’வாட்ஸ் ஆப்’ மூலம் புக்கிங் செய்தால், ’டுனிசோ’ உணவு டெலிவரி செய்யும் செயலி மூலம், வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, 63692 43506 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.மார்கழியில் மக்களிசை!வானம் கலை விழாவை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்நிகழ்ச்சி, சென்னையில் பல்வேறு அரங்கங்களில், எட்டு நாள் நடைபெற உள்ளது.இவர், ’காஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். இதில், பாப், ராப், கானா, கிராமியம், கர்நாடக இசை என, அனைத்து வகையான இசை மற்றும் கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.இதில், 24 - 26 வரை, தி.நகர், வாணி மஹாலில், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி மற்றும் கானா பாடல் இடம் பெற உள்ளது.மயிலாப்பூர், பைன் ஆர்ட்ஸ் கிளப்பில், 27 மற்றும் 28 தேதிகளில், ஹிப்ஹாப் மற்றும் ஒப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது.ராஜா அண்ணாமலை மன்றத்தில், 29 மற்றும் 30 தேதியில், அறிவொளி மற்றும் தெம்மாங்கு நிகழ்ச்சி நடக்கிறது. இறுதி நாளான, 31ம் தேதி, காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதன் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.