பதிவு செய்த நாள்
27
டிச
2020
11:12
கடலுார் மாவட்டம் சிங்கிரிகுடி கோயிலில் ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர் அருள்பாலிக்கின்றனர். இவர்களை விரதமிருந்து வழிபட்டால் நாள்பட்ட பிரச்னைக்கு கூட விடிவுகாலம் ஏற்படும்.
மகாவிஷ்ணுவே பரம்பொருள் என்று பக்த பிரகலாதன் வழிபட்டான். அவனது தந்தையான அசுரன் இரண்யனுக்கு, மகனின் போக்கு பிடிக்கவில்லை. மலையில் இருந்து உருட்டியும், விஷம் கொடுத்தும் மகனை தண்டித்தான். ஆனால் விஷ்ணுவின் அருளால் உயிர் தப்பினான். இறுதியாக துாண் ஒன்றை பிளந்தபடி சிங்க முகத்துடன், மனித உடலுமாக இணைந்து நரசிம்மராக அவதரித்தார் மகாவிஷ்ணு. இரண்யனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்தபடி கர்ஜித்தார். அந்த நரசிம்ம பெருமானே இத்தலத்தில் 16 கைகளுடன் மூலவராக அருள்பாலிக்கிறார். மூலவரின் இடது புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். மேலும் வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மரும் கருவறையில் உள்ளனர். இப்படியாக ஒரே இடத்தில் மூன்று நரசிம்மர் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. மூலவர் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, வில், கதாயுதம், கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவை உள்ளன. மற்ற கைகள் இரணியனை வயிற்றை கிழித்த நிலையில் உள்ளன. உற்ஸவரான பிரகலாதவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கனகவல்லித்தாயார் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருள்புரிகிறாள். ‘கனகா’ என்றால் தங்கம். செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அருளும் இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் தீபமேற்றி வழிபடுகின்றனர். மகாலட்சுமியின் அம்சமான வில்வமரம் தல விருட்சமாக உள்ளது. ராஜராஜ சோழன், விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது. ராமர், ஆண்டாள், கருடன், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், விஷ்ணு துர்க்கை, அனுமன் சன்னதிகள் உள்ளன. அகோபிலம் மடம் 4வது ஜீயரின் பிருந்தாவனம் உள்ளது. ஜமதக்னி, இந்திர, பிருகு, வாமனர், கருட தீர்த்தங்கள் இங்குள்ளன. கடன் தொல்லை, திருமணத் தடை, குழந்தையின்மை, கிரக தோஷம் தீர சுவாதி நட்சத்திரத்தன்று பக்தர்கள் விரதமிருந்து தரிசிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வஸ்திரம் சாத்துகின்றனர்.
எப்படி செல்வது
கடலுார்- புதுச்சேரி சாலையில் 15 கி.மீ., துாரத்தில் தவளைக்குப்பம். இங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ.,