பதிவு செய்த நாள்
02
ஜன
2021
02:01
ஈரோடு: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, தரிசனம் செய்ய குவிந்த பக்தர்களால், கோவில்கள் களை கட்டின.
ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று, ஈரோட்டில் அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் மூலவர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில், மாநகராட்சி ராஜகணபதி வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி தந்தனர். கோட்டை பத்ரகாளியம்மன், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பத்ர காளியம்மன் கோவில் குண்டத்தில் தீபம் ஏற்றினர். கருங்கல்பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில், சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடந்தது. கோவில்களில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால், பல மாதங்களுக்குப் பிறகு, கோவில்கள் நேற்று சகஜ நிலைக்கு திரும்பின.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், காலை, 6:00 மணி முதலே, ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே, கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.