அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், சபரிமலையில் நடைபெறுவது போல் படி பூஜை வழிபாடு நடந்தது. அன்னூரில், தென்னம்பாளையம் ரோட்டில், ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், அன்னூர் ஐயப்பன் கோவிலில், சபரிமலை, ஐயப்பன் கோவிலில் நடை பெறுவது போலவே 18 படிகளுக்கு பூஜை வழிபாடு நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள், படி பூஜை குழுவினர் என திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.