பதிவு செய்த நாள்
26
ஜன
2021
10:01
அன்னூர்: லக்கேபாளையம், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. லக்கேபாளையத்தில், பழமையான அருள்தரும் மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், புதிதாக கருவறை, விமானம், மகா மண்டபம், மேற்கூரை, அன்னதான மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, கீழ்தள திருப்பணிகள் செய்யப்பட்டன.
கும்பாபிஷேக விழா, 23ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. அன்று முளைப்பாரி ஊர்வலமும், திருவிளக்கு வழிபாடும் நடந்தது. இரண்டாம் நாள் இரண்டாம் கால வேள்வி பூஜையும், திருமுறை விண்ணப்பம் செய்தலும் நடந்தது. நேற்று அதிகாலையில், நான்காம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு, விநாயகர், மாரியம்மனுக்கும், விமான கலசங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள், திருப்பணி குழு நிர்வாகி காளிச்சாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.