பதிவு செய்த நாள்
15
பிப்
2021
11:02
உடுமலை:கோடைத்திருவிழாவை கொண்டாட, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் எடுத்துச்செல்ல, சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக வந்து செல்கின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள, அம்மன் கோவில்களில், மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில், கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இத்திருவிழாக்களுக்கு, நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி முடிந்ததும், பல்வேறு புனித தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.குறிப்பாக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து, பாலாற்றில், தீர்த்தம் எடுத்து, அலங்கரித்து, சிறப்பு பூஜை நடத்தி, மேளதாளத்துடன், கிராமத்துக்கு எடுத்து செல்வார்கள்.மாசி மாதம் துவங்கியுள்ளதையடுத்து, திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க வரும் கிராம மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.கிராம மக்கள் கூறுகையில், கோடை காலம் துவங்கியதும், கிராமத்திலுள்ள, அம்மனுக்கு, நோன்பு சாட்டி வழிபடுகிறோம். அம்மை உட்பட கோடை கால நோய்களை தவிர்க்க, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை கொண்டு, தீர்த்தம் எடுத்து வழிபடுகிறோம். குறிப்பாக, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் கரை தொட்டு செல்லும் பாலாற்றில், தீர்த்தம் எடுத்துச்செல்லும், நடைமுறையை, நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம், என்றனர். திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க வரும் பக்தர்களுக்கு, தனியிடம் உட்பட சில வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். விரதமிருந்து வரும் பக்தர்கள், குளிக்கவும், தீர்த்த கும்பங்களை வைத்து வழிபடவும், தனியிடம் ஒதுக்க வேண்டும்.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது, பக்தர்கள், பஞ்சலிங்க அருவியிலும், பாலாற்றின் கரையிலும், இடமில்லாமல், தவிக்கின்றனர்.இது குறித்து இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.