பதிவு செய்த நாள்
25
ஜூலை
2021
02:07
சென்னை; கன்னியாகுமரியில் புகழ்பெற்ற காட்டாலை கண்டன் சாஸ்தா கோவிலில், அறநிலையத் துறை அமைச்சர், கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால், 47 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தினசரி பூஜைகள் துவக்கப்பட்டுள்ளன.பொது மக்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் குறைகளை, இணையதளம் வாயிலாக தெரிவிக்கும் திட்டத்தை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஜூன் மாதம் துவக்கி வைத்தார்.
அதில், குமரி மாவட்டம், கல்குளம் வட்டம், வெள்ளிமலை பகுதியில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, காட்டாலை கண்டன் சாஸ்தா கோவில் குறித்து, பழைய திருவிதாங்கூர் வரலாற்றை ஆராய்ச்சி செய்து, ஆவண படித்தி வரும் ஆராய்ச்சியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர், புகார் மனு அளித்திருந்தார்.அதில், கோவிலுக்கு தினசரி பூஜைகள் செய்யாமல், 47 ஆண்டுகளாக இருப்பதாகவும், உடனடியாக பூஜைகள் செய்ய நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தார். அந்த மனு தொடர்பான பதிலில், தவறான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அமைச்சர், கமிஷனர் குமரகுருபரனிடம், ராதாகிருஷ்ணன் மேல்முறையீடு செய்திருந்தார்.உடன், அமைச்சர் சேகர்பாபு உத்தரவுபடி, குமரி மாவட்ட இணைக் கமிஷனர் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், முறையான பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதன்படி, மீண்டும் கோவில் நிர்வாகம் சார்பில், 47 ஆண்டுகளுக்கு பின், தினசரி பூஜைகள் துவக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் தேவஸ்தான விதிமுறைப்படி, ஒருகால பூஜை மட்டுமே உள்ளது. எனவே, காலை, 8:00 முதல், 9:30 மணிக்குள் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.தினசரி பூஜைகள் நடத்த முயற்சி மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரனுக்கு, காட்டாலை கண்டன் சாஸ்தா கோவில் பக்தர்களும் பொது மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.