பதிவு செய்த நாள்
27
ஆக
2021
10:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஓரிக்கையில் அமைந்துள்ள மஹா சுவாமிகள் மணி மண்டத்தில், ஓவியர் ஏ.மணிவேலு வரைந்த பல்வேறு ஹிந்து கோவில் சுவாமி ஓவியங்கள் கண்காட்சி நேற்று துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலாயா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராகவன் திறந்து வைத்தார்.
மூலவர் சுவாமிபின், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஓவியங்களை பார்வையிட்டார். இந்த ஓவிய கண்காட்சி, அடுத்த மாதம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.கோவில்களில் மூலவரை அதே அலங்காரத்தில் காண்பது போல் அந்த ஓவியங்கள் அமைந்துள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு கோவிலாக சென்று, அந்த ஊரில் தங்கி கோவிலின் சுவாமியை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு, மூலவர் சுவாமியை வரைவதற்கு அனுமதி பெற்று, மணிவேலு வரைந்த ஓவியங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சிக்கு, சென்னை டாட் ஸ்கூல் ஆப் டிசைன் ஏற்பாடு செய்திருந்தது.ஓவியர் மணிவேலு, 80, தமிழகத்தில் உள்ள பழைமையான அனைத்து கோவில்களின் மூலவர் உருவத்தை ஓவியமாக வரைந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக திருவண்ணாமலை அண்ணாமலை சுவாமியை ஓவியமாக வரைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 500 ஓவியங்கள்இது குறித்து ஓவியர் மணிவேலு கூறியதாவது:எனது ஊர் சிக்கல். எங்கள் குடும்பம், பரம்பரை பரம்பரையாக சிற்பம் தொழில் செய்து வந்தவர்கள். அதன் வழியில் வந்த நான், என் தந்தையிடம் கலையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.ஒரு படம் வரைவதற்கு, குறைந்த பட்சம் 25 நாட்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 1980 முதல், சுவாமி ஓவியங்கள் வரைய துவங்கினேன். இது வரை, 500 ஓவியங்கள் வரைந்துள்ளேன். இதற்கு முன் தஞ்சாவூரில் என் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.