பதிவு செய்த நாள்
13
அக்
2021
10:10
கொரோனாவை காரணம் காட்டி, வாரத்தில் மூன்று நாட்கள் கோவில்களை மூடியிருக்கும் அரசுக்கு எதிராக, பெரும் கொந்தளிப்பு எழுந்துள்ளது.நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு, 9ம் தேதி மதியம் 12:00 மணிக்கு சென்ற, ஆட்டோ டிரைவர்கள் ஜெயராஜ், பாபு ஆகியோர், கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று வழிபட்டுள்ளனர். இது, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்மிக வெறியன்: ஜெயராஜ் கூறியதாவது: நான் சாதாரண ஆட்டோக்காரன். ஆனாலும், ஆன்மிக வெறியன். நாகர்கோவிலில் பிரசித்த பெற்ற நாகராஜா கோவிலுக்கு நினைத்த போதெல்லாம் சென்று வருவேன். என்ன வேலை இருந்தாலும், சனி மற்றும் ஞாயிறன்று கோவிலுக்கு செல்லாமல் இருக்க மாட்டேன். கோவிலுக்கு செல்லவில்லை என்றால், கிறுக்கு பிடித்தது போல இருக்கும். ஏற்கனவே கோவிலில் நிறைவேற்ற சில வேண்டுதல்கள் இருந்தன. கொரோனாவை காரணம் காட்டி, கோவில்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு இருந்ததால், வேண்டுதல்களை நிறைவேற்ற முடியவில்லை.வார இறுதி நாட்களில் நிறைவேற்றலாம் என திட்டமிட்டபோது, அதற்கும் அரசு தடை போட்டுள்ளது. கோவிலுக்கு செல்வது, பக்தனின் உரிமை. அதில் தலையிட, அரசுக்கு உரிமை இல்லை.
தொடர்கதை: அதனால், கடும் கோபத்தில் இருந்தேன். கடந்த சனிக்கிழமை கோவிலுக்கு செல்ல வேண்டும் போல தோன்றியது. சக ஆட்டோக்காரர் பாபுவிடம் கூறினேன்.வா... கோவிலுக்கு போய் வருவோம் என்று அழைத்தார். இருவரும், பூஜை பொருட்களை வாங்கி கொண்டு கோவிலுக்கு சென்றோம். கோவில் பூட்டி இருந்தது. உடனே, அருகில் கிடந்த கல்லை எடுத்து பூட்டை உடைத்தோம். கதவை திறந்து கோவிலுக்குள் சென்று, நாங்களே சாமிக்கு பூஜை செய்து விட்டு திரும்பினோம். என் வேண்டுதல் நிறைவேறியதில் மகிழ்ச்சி. ஆனால், மற்றவர்கள் சாமி கும்பிட முடியாத நிலை காணப்படுகிறது. இது ஒரு பரிகார ஸ்தலம். பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் சென்று, சாமி கும்பிடவும், காணிக்கை செலுத்தவும் தடை ஏற்படுத்தினால், அதைப் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா? அதனால் தான், நண்பர் பாபுவுடன் சேர்ந்து, கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சாமி தரிசனம் செய்தோம். எங்களை போன்ற எண்ணத்தில் பலரும் உள்ளனர். கோவில்களுக்கு மட்டும் தடை ஏற்படுத்தி கொண்டிருந்தால், இதேபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே உணர்வு பலருக்கும் உண்டு!: நாகராஜா கோவிலுக்குள் பூட்டை உடைத்து ஜெயராஜ், பாபு ஆகியோர் சென்றது, உணர்ச்சிப்பூர்வமாக நடந்த போராட்டம். இதில் ஜெயராஜ், நாகர்கோவில் பா.ஜ., மகளிர் அணி தலைவி ராணியின் சகோதரர். நாகர்கோவிலில் இரு பக்தர்கள் வாயிலாக, ஒட்டுமொத்த ஹிந்துக்களின் உணர்வு வெளிப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தை அரசு மேம்போக்காக எடுத்துக்கொள்ள கூடாது. இதே உணர்வுடன், தமிழகம் முழுக்க பக்தர்கள் உள்ளனர்.-- மீனாதேவ்,பா.ஜ., முன்னாள் நகர்சபை தலைவர், நாகர்கோவில்காயப்படுத்த விருப்பமில்லை
பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலுக்கு வார இறுதி நாட்களில், உலகம் முழுதும் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்த வருவர். அந்த மூன்று நாட்கள் கோவில் பூட்டியிருப்பதால், பக்தர்கள் திரும்பி செல்கின்றனர். இரண்டு பக்தர்கள் உணர்ச்சி வசப்பட்டு, கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சாமி கும்பிட்டுள்ளனர். கோவில் பூட்டை உடைத்தது தவறு தான். என்றாலும், இது உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், கோவில் நிர்வாகம் கவனமாக செயல்படுகிறது. முறைப்படி நடவடிக்கைக்கு யாரிடம் கூற வேண்டுமோ, அதை கூறி விட்டோம். மற்றபடி, இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி, பக்தர்கள் உணர்வை காயப்படுத்துவதில், யாருக்கும் விருப்பம் இல்லை.
-- கோவில் நிர்வாகம்- -- நமது நிருபர் -