பதிவு செய்த நாள்
26
அக்
2021
08:10
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி நடவடிக்கையால், கோபுரத்தை மறைத்திருந்த கூரை அகற்றப்பட்டு, முழுமையான கோபுர தரிசனம் கிடைப்பதால், பக்தர்கள் ஆனந்தம் அடைந்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால், வெளியில் தெரியாமல் இருந்த, 165 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமூல பெருமாள் கோவிலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிக்கி உள்ளது: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில் இந்த பணிகளை பார்வையிட்டார்.அப்போது, கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில், இரும்பு மேற்கூரை உள்ளது; அதை அகற்றினால், கோபுர தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.மேலும், வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு அருகே உள்ள, 165 ஆண்டுகளுக்கு முந்தைய, பழம் பெருமை மிக்க ஆதிலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் இருக்கும் இடம் தெரியாமல், கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. அதற்கும் தீர்வு காண வேண்டும் என அமைச்சரிடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வாழ்வாதாரம்: இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த அமைச்சர் சேகர்பாபு, கோபுரம் தெரியும் வகையில், மேற்கூரையை நீக்கவும், பெருமாள் கோவிலை மறைத்துள்ள கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். ஓரிரு நாட்களில் கடைகள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டன.அகற்றப்பட்ட கடைகள் பெரும்பாலும் பூக்கடைகள் என்பதால், அவர்கள் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து, அருகில் உள்ள காலி இடத்தில், கடைகள் கட்டி, பூ வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு வாரங்களுக்கு மேல் நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின், தற்போது எந்த இடையூறும் இன்றி, பக்தர்கள் கோபுர தரிசனம் செய்ய முடிகிறது. தற்போது, கும்பாபிஷேகத்திற்காக கோபுரத்தில் வண்ணப்பூச்சு நடந்து வருகிறது. அதனால், பச்சை திரை போடப்பட்டு உள்ளது. வண்ணப்பூச்சு முடிந்து, பச்சைத் திரை அகற்றப்பட்டதும், சுற்றுப்பக்கம் எங்கு இருந்து பார்த்தாலும், கோபுரத்தின் அழகும், கம்பீரமும் பக்தர்களை ஈர்க்கும். ஆக்கிரமிப்புகள் இன்றி, பெருமாள் கோவிலும் பளிச்சிட்டுள்ளது. இதனால், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆய்வுஇந்நிலையில், வடபழநி ஆண்டவர் கோவில் சீரமைப்பு பணிகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, கோபுர தரிசனத்திற்கு வழி வகுத்ததற்காகவும், நீண்ட கால ஆக்கிரமிப்புக்களை அகற்றி, பழமை வாய்ந்த பெருமாள் கோவில் பளிச்சிட வைத்ததற்காகவும், பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.