மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2012 10:07
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் இரண்டு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். நெரிசல் காரணமாக ஊஞ்சல் உற்சவத்தை விரைவாக முடித்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளிக் கவசம் அணிவித்தனர். இரவு 11.50 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் பலர் சாமி அருள் வந்து ஆடினர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, செஞ்சி தாசில்தார் வாசுதேவன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். 2 லட்சம் பேர் நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் காலை முதல் பக்தர்கள் வரத் துவங்கினர். இரவு 11 மணிக்கு மேல்மலையனூரில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்திருந்தனர். தெருக்களில் கூட்டம் அலைமோதியது. கோவிலின் மேற்கு வாசல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும் வடக்கு வாசல் எதிரிலும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் வழக்கமாக 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை சீக்கிரமாக துவங்க டி.எஸ்.பி., பன்னீர் செல்வம் கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டார். இதையேற்று 11.50 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கினர்.
25 நிமிடத்தில் முடிவு: வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தை கூட்ட நெரிசல் காரணமாக 25 நிமிடங்களில் முடித்தனர். உற்சவம் முடிந்து வெளியே செல்லும் போதும் கடும் நெரிசல் ஏற்பட்டது.