பதிவு செய்த நாள்
20
ஜூலை
2012
10:07
புதுச்சேரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கடல் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். ஆடி அமாவாசை நேற்று முன்தினம், நேற்று என இரு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. சூரிய உதயத்திற்குப் பிறகு நேற்று காலை 10.30 மணி வரை அமாவாசை நீடித்ததையொட்டி, பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவர்கள் கடல் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். மணக்குள விநாயகர், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், மிஷன் வீதி காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள், காசுக்கடை சுந்தர விநாயகர், கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன், அரவிந்தர் வீதி முத்தாலம்மன், சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து, அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக வந்து, தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமிகளை, பக்தர்கள் வழிபட்டனர்.