சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடிகர் செந்தில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2012 10:07
விக்கிரமசிங்கபுரம்:காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் நடிகர் செந்தில் சுவாமி தரிசனம் செய்தார்.நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் ஒரு நிகழ்ச்சியாக இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி ராஜ தர்பார் உடையில் பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.நேற்று இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நடிகர் செந்தில் கோயிலுக்கு வந்தார். மேலும் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மூலமாக இரண்டு பிரான்ஸ் நாட்டு பெண்களும் வந்தனர். சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரைப்பட நடிகர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கேரள மாநிலம் சென்றபோது அங்குள்ளவர்கள் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கள். அதனால் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தேன். காட்டு பகுதியில் இப்படி ஒரு அருமையான கோயில் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. இந்த காட்டிற்குள் இருக்கும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இவ்வளவு மக்கள் கூட்டம் இருக்கும் என்றும் நினைத்து கூட பார்க்கவில்லை. இங்கு சுவாமி கும்பிட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் ரசித்தேன் என்றார்.