பதிவு செய்த நாள்
21
ஜூலை
2012
11:07
புதுடில்லி: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 1998ம் ஆண்டு போடப்பட்ட சபரி ரயில் பாதை திட்டம், 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. திட்டத்திற்கான செலவில் பாதியைத் தர, கேரள அரசு சம்மதிக்காததால், திட்டம் கைவிடப்படும் நிலை உருவாகியுள்ளது.கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில், பம்பை நதிக்கரை உள்ளது.வெளியிடங்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள், பம்பை வரையே செல்ல முடியும். அங்கிருந்து, கால்நடையாகத் தான், சபரிமலை செல்ல முடியும். நடக்க முடியாத பக்தர்கள், "டோலி எனப்படும், மனிதன் சுமக்கும் நாற்காலியில் செல்லலாம்.ரயில்கள் மூலம், செங்கன்னூர், கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளுக்கு வரும் பக்தர்கள், அங்கிருந்து, பஸ், கார், வேன் மூலம், பம்பை வருகின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக, திருச்சூர் மாவட்டம் அங்கமாலி முதல், கோட்டயம் மாவட்டம் எரிமேலி வரை ரயில் பாதை அமைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இதற்காக, அங்கமாலி ரயில் நிலையத்தில் இருந்து, ஆதிசங்கரர் பிறந்த பகுதியான, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, தொடுபுழா வழியாக, எரிமேலிக்கு, 133 கி.மீ., ரயில் பாதை அமைக்க, 1998ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அப்போது, 500 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிலங்களைக் கையகப்படுத்த மட்டும், 52 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தத் தேவைப்படும் தொகையில் பாதியை, கேரள அரசு ஏற்க வேண்டுமென முடிவானது. ஆனால், இதை ஏற்க, கேரள அரசு மறுத்து விட்டதால், 14 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் உள்ளது.இந்தத் திட்டத்தில், அங்கமாலியில் இருந்து, காலடி வரை எட்டு கி.மீ., தூரத்திற்கு, சில பணிகள் நடந்தன என்றாலும், முற்று பெறாமல் கிடக்கிறது. பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது திட்ட மதிப்பீடு, 1,566 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிதிச் சுமை அதிகரித்து, மாநில அரசு தள்ளாடி வரும் நிலையில், இந்த திட்டத்திற்காகச் செலவிட முடியாத நிலையில், கேரள அரசு உள்ளது.இதுகுறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பி.,க்கள் ஆகியோர், ரயில்வே வாரியத் தலைவர் வினய் மிட்டலிடம் முறையிட்டுள்ளனர். "சபரிமலை பக்தர்களுக்கான இந்த திட்டத்தை கைவிடக்கூடாது; விரைவாக நிறைவேற்ற வேண்டும் என, அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இத்திட்டம் குறித்து இறுதி முடிவெடுக்க, மத்திய ரயில்வே அமைச்சரை அணுக, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.