பதிவு செய்த நாள்
15
ஏப்
2022
06:04
ராணிப்பேட்டை-சோளிங்கர் மலை கோவிலில் ரோப் கார் வசதிக்கான சோதனை ஓட்டத்தை, தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார்.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில்,750 அடி உயரமுள்ள மலை மீது, ஸ்ரீயோக லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மற்றும் அமிர்தவல்லி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.செங்குத்தான ஒரே குன்றின் மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு, பக்தர்கள் 1,305 படிகள் ஏறிச்சென்று வழிபடுகின்றனர். இதனால், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, 2006ம் ஆண்டு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரோப் கார் அமைக்க உத்தரவிடப்பட்டது. பின், 2009ல் 9.50 கோடி ரூபாய்க்கு மறு மதிப்பீட்டில், பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து வந்தது.தொடர்ந்து, 12 ஆண்டுகளாக நடந்து வந்த ரோப் கார் அமைக்கும் பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. ரோப் கார் சோதனை ஓட்டம், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து சோதனை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, அமைச்சர் காந்தி, எம்.பி., ஜெத்ரட்சகன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் ரோப் காரில் மலைக்கு சென்று, நரசிம்மரை தரிசனம் செய்தனர்.