மயிலாடுதுறை: மூவலூர் கோவிலில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 1,008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத மார்க்க சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் சுவாமிக்கு சங்காபிசேகம் செய்து வழிபட்டால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இந்நிலையில் திருவாரூர் பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 108 சிவன் கோவில்களில் 1008 சங்காபிஷேகம் செய்வது என திட்டமிட்டு முதலாவதாக பிரசித்தி பெற்ற நோய் தீர்க்கும் தலமான மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோவிலில் கொரோனா நோய்த் தொற்று நீங்க வேண்டி சுவாமிக்கு 1008 வலம்புரி சங்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக 108 மூலிகைகளைக் கொண்டு கொரோனா நோய் தடுப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகாபூர்ணாஹுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஹோமம் மற்றும் சங்கு அபிஷேக, ஆராதனைகளை திருவாரூர் பாசம் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீஹரிஹர ஐயப்ப சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர் விக்னேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.