1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 09:07
விழுப்புரம்-விழுப்புரம் அருகே 1200 ஆண்டுகள் பழமையான கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த நேமூரில் வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள ஏரிக்கரையில் துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.இச்சிற்பம் கி.பி., 8 - 9ம் நுாற்றாண்டைச் (பல்லவர் காலம்) சேர்ந்தது. 6 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் உள்ள கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத் தலையின் மீது நிற்கும்படி உள்ளது. இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூஜை செய்யும் நிலையில் அடியவர் இருவர் காட்டப்பட்டு இருக்கின்றனர். கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் 6 முகங்களைக் கொண்ட சிற்பம் தனியே காணப்படுகிறது.இது முருகனைக் குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும் என செங்குட்டுவன் தெரிவித்தார்.