உத்திரமேரூரில் பழமை வாய்ந்த வடவாயிற் செல்வி என்கிற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவான் மூலவரை வழிபடுவது சிறப்பாக உள்ளது. அதாவது, உத்ராயணமான நாளில், சூரியன் இடம் பெயரும் போது, சூரிய ஒளிக் கதிர்கள் மூலவர் மீது விழும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது, சூரிய உதயத்தின் போது ஒளிகதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள மூலவர் மீது பட்டு பிரகாசிக்கும் அதிசய நிகழ்வு நடைபெறும். அதன்படி, இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, இக்கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் விழுந்தது. காலை 6.09 மணி முதல், காலை 6.24 மணி வரை தொடர்ந்து 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில் மூலவராக உள்ள துர்க்கை அம்மனின் கிரீடத்தில் சூரிய ஒலிக்கதிர்கள் முதலில் உச்சியில் பட்டு, படிப்படியாக திரு மேனி முழுதும் பரவி பிரகாசித்து. பின், இறுதியாக பாதத்தில் முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் ஓம் சக்தி என பக்தி பரவசமுடன் கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி துர்க்கை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. இதுபோன்று, தமிழகத்தில் சில கோவில்களில் மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடைபெறுவதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் மட்டுமே இதுபோன்ற சிறப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.