பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
09:07
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசிக்கின்றனர். அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். நேற்று, வெள்ளிக்கிழமை மற்றும் திருவோண விரதத்தை முன்னிட்டு, திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.பொள்ளாச்சி, நடுப்புணி ரோட்டில், ஆர்.வி.பி.புதுாரில் மாகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும், ஆனி மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையை, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.அதன்படி, நேற்று, ஆடி முதல் வெள்ளிக்கிழமையாக கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.