பதிவு செய்த நாள்
10
ஆக
2022
01:08
சின்னாளபட்டி: பிள்ளையார்நத்தம் மகாமுத்து மாரியம்மன் கோயில் விழாவிற்காக, குடகனாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களின் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
சின்னாளபட்டி அருகே பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், அபிஷேகத்திற்காக குடகனாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம் நடக்கும். இந்தாண்டிற்கான விழா, ஆக. 8ல் பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நடந்தது. பிள்ளையார்நத்தத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடகனாற்றுக்கு ஊர்வலம் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி, தீர்த்தம், பால்குட ஊர்வலம் துவக்கினர். அனுமந்தராயன் கோட்டை, பித்தளைப்பட்டி, குமுளி 4 வழி சாலை வழியே ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், பால் அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆத்தூர் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மற்றொரு முக்கிய நிகழ்வான, பூக்குழி இறங்குதல், இன்று(அக். 10ல்) மாலை 4 மணிக்கு கோயில் அருகே நடக்கிறது.