மானாமதுரை : மானாமதுரையில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையைச் சேர்ந்த நவநீத பெருமாள் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் உள்ள நவநீத பெருமாள் மற்றும் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் வருடந்தோறும் ஆவணியில் திருக்கூடல் மலையில் இருந்து குதிரை வாகனத்தில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூர் வழியாக மானாமதுரைக்கு வந்து வீதிவுலா செல்வது வழக்கம்.வரும் வழியில் உள்ள மண்டகப்படிகளில் தங்கி அருள் பாலிப்பார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக வீதிவுலா நடைபெறாத நிலையில் இந்தாண்டு விழாவிற்காக கடந்த வாரம் மலையில் இருந்து புறப்பட்ட சுவாமி நேற்று மானாமதுரைக்கு வந்தடைந்தார்.
மானாமதுரையில் உள்ள வைகை கரை அய்யனார் மற்றும் அலங்கார குளம் சோனையா சுவாமி கோயிலில் பரம்பரை அறங்காவலர் காளீஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சுவாமிக்கு பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு மானாமதுரை வேளார் தெருவில் உள்ள முருகன் கோயிலிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.