மயிலாடுதுறை: சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு சாரடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நூறு ஆண்டுக்கு முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவில் ஸ்தல வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த இக்கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. இன்று காலை நாலாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியம் இசைக்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன. காலை 6:45 மணிக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாரடி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாக பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.