பதிவு செய்த நாள்
22
செப்
2022
08:09
புரட்டாசி அமாவாசையை (செப்.25) மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை(செப்.11 - 24) மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிதுர்கடன் என்னும் தர்ப்பணம் செய்வது நம் கடமை. பெற்றோருக்கு பிள்ளையாக பிறந்தால் மட்டும் புத்திரனாகி விட முடியாது. பின்வரும் மூன்று கடமைகளைச் செய்பவரே இந்த தகுதியை பெறுகிறார்.
* வாழும் காலத்தில் பெற்றோரை கவுரவமாக நடத்துதல்.
* அவர்கள் மறைந்த பின் பிதுர்கடன்கள் செய்தல்.
* வாழ்நாளில் ஒருமுறையாவது முன்னோருக்கு விஷ்ணுகயாவில் (உத்தர்கண்ட்) சிராத்தம் கொடுத்தல்.மகாளய அமாவாசையில் சிராத்தம் கொடுத்தால் நம் வம்சம் மட்டுமின்றி மனைவி, மகள்(திருமணத்திற்குப் பின்), மருமகள், சகோதரி, மாமா, அத்தை ஆகியோரின் வம்சங்களும் 101 தலைமுறைக்கு நற்கதி பெறுவர். ஒருவர் செய்யும் சிராத்தத்தில்
மேற்சொன்ன ஏழு வம்சத்தினரும் பலனடைவர் என்கிறது கருடபுராணம்.
தன் குடும்பத்தினரை வாழ்த்த திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் முன்னோர்கள் எழுந்தருள்வர். அவர்களின் ஆசி பெறவே திருமணத்தில் நாந்தி சிராத்தம் செய்கிறோம். திருமண நிகழ்ச்சியில் பாலிகை இடுதல், வாழை மரம், மாவிலை தோரணம் கட்டுவதும் பிதுர்ஆசியைப் பெறுவதற்காகவே. ஹோமம், பிராமணருக்கு உணவிடுதல், பிண்டம் கொடுத்தல் என்னும் மூன்றும் சிராத்தத்திற்கு அடிப்படையானவை.
உறவினர்களில் யாராவது நம் முன்னோருக்கு சிராத்தம் செய்யாவிட்டால் கூட நமக்கும் தோஷம் ஏற்படும். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் மகாளய அமாவாசையில் சிராத்தம் செய்வது அவசியம். இதில் மட்டுமே முன்னோர்கள் மட்டுமின்றி காருண்ய பித்ருக்களுக்கும் பிண்டம் இடலாம். காருண்ய பித்ருக்கள் என்பது நம் வாழ்வுக்கு துணைநின்ற எந்த ஒரு நபராகவும் இருக்கலாம். உதாரணமாக நம் தாயாரின் பிரசவம் பார்த்த நர்ஸ், டாக்டர், வீட்டு வேலையாள், தோட்டக் காரர், ஆசிரியர், சிறுவயதில் இறந்த நம் குடும்பத்தினர்,கருவிலேயே மரணித்தவர், துர்மரணம் அடைந்தவர், உற்றார் உறவினர்கள். முன்னோர்களுடன் இவர்களும் திருப்தி அடைந்து நமக்கு ஆசியளிப்பர். மகாளய அமாவாசையன்று விரதமிருந்து தர்ப்பணம், சிராத்தம் செய்தால் காசி(உத்தரபிரதேசம்), விஷ்ணுகயா (உத்தரகண்ட்) யாத்திரை செய்த புண்ணியம் சேரும் என்கிறது சாஸ்திரம். ஆண்டுதோறும் மகாளய பட்சத்தில் சிராத்தம் செய்தால் மனநிறைவுடன் வாழலாம்.