பதிவு செய்த நாள்
16
நவ
2022
08:11
திருவண்ணாமலை: ‘‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபத்தன்று, நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பக்தர்கள் மட்டும் மலை மீதேறி சென்று, மஹா தீபம் காண அனுமதிக்கப்படுவர்,’’ என மாவட்ட கலெக்டர் முருகேஷ் பேசினார்.
திருவண்ணாமலையில், தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர்கள் சேகர்பாபு, வேலு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் முருகேஷ் பேசியதாவது: வரும், 27ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் டிச., 6ல் கோவில் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதைக்காண, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நகரின் இணைப்பு சாலைகளான, ஒன்பது இடங்கள் உள்ளிட்ட, 13 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. மொத்தம், 12 ஆயிரத்து, 400 கார் நிறுத்தும் வகையில், 59 கார் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளது. இப்பகுதிகளில் குடிநீர், கழிவறை வசதி, காவல் மையம் அமைக்கப்படும். மேலும், 2,692 சிறப்பு பஸ்கள் மூலம், 6,431 ‘டிரிப்’கள் இயக்கப்படும். தற்காலிக பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோவில் வரை பக்தர்கள் வர, 100 பஸ்கள் இயக்கப்படும். தற்போது, ஒன்பது ரயில்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் நிலையில், கூடுதலாக, 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள், நிர்ணயித்த ஆட்டோ கட்டணத்தை மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மஹா தீபத்தை காண மலை மீதேற, உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பக்தர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அவர் பேசினார்.