ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை; மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2023 08:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. இன்று (ஜன.8)முதல் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது.
ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று இரவு 06:30மணிக்கு மேல் ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாட வீதிகள் வழியாக பெரிய பெருமாள் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல சேவை முடிந்து பெரிய பெருமாள் மூலஸ்தானத்திற்கு சேருதலும், அதனைத் தொடர்ந்து அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஜனவரி 8 முதல் துவங்கி 15 முடிய, மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் நடக்கிறது. இதற்காக தினமும் காலை 9:00 மணிக்கு மேல் ஆண்டாள் மாட வீதிகள் வழியாக மண்டபங்கள் எழுந்தருளி, திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு மதியம் 3:00 மணிக்குமேல் எண்ணெய்காப்பு சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.