பதிவு செய்த நாள்
31
ஜன
2023
08:01
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம், அரோகரா கோஷம் விண்ணதிர நடந்தது.
காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த, 27ம் தேதி மலை அடிவாரத்தில், வீரகாளியம்மன் கோவிலில் துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணிக்கு வீரகாளியம்மன், மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின் சிறப்பு பூஜை, மயில் வாகன அபிஷேகம், விநாயகர் வழிபாடு நடந்தது. கோவில் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில், 11:58 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதன் கட்டளைதாரர் இருபத்து நான்கு நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர். சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் மலையை வலம் வந்தார். இதையடுத்து மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு, சுவாமி எழுந்தருளி, பூஜை நடந்தது. இங்கு தினசரி காலை, 9:00 மணிக்கு காலசாந்தி திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டப கட்டளை நடக்கும். தேரோட்டம் பிப்.,5ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:00 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்துக்கு எழுந்தருள்கிறார். அன்று மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது. 6, 7 தேதிகளில் மலையை வலம் வந்து நிலை அடைகிறது. 10ம் தேதி தெப்ப உற்சவம், பரிவேட்டை; 11ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா தரிசனம் நடக்கிறது. 14ம் தேதி இரவு கொடியிறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.