பதிவு செய்த நாள்
17
பிப்
2023
06:02
அவிநாசி: அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.
அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா இன்று மாலை 4:30 மணியளவில் சனி பிரதோஷ பூஜைகளுடன் துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணியளவில் முதற்கால பூஜையும், 10:30 மணியளவில் இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு ஒரு மணிக்கு மூன்றாம் கால பூஜையும் மற்றும் பின் இரவு 3:30 மணியளவில் 4ம் கால பூஜைகள் நடைபெறுகின்றது. அதனையடுத்து, நாளை காலை 5:30 மணியளவில் உஷத்கால பூஜை நடைபெறும் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். மேலும்,மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரருக்கும்,கோவில் உள்பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகர பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெறும். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்,சுகாதாரத்துறை, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் அவசரகால மருத்துவம் மற்றும் தூய்மை பணியிலும், போலீசார், தீயணைப்பு மீட்பு வீரர்கள் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் ஈடுபட உள்ளனர். மேலும்,பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய கோவில் பிரகாரத்தை சுற்றிலும் நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன் தெரிவித்தார்.