பதிவு செய்த நாள்
05
மார்
2023
11:03
மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராடிட ஏற்ற புனித மாதமாகும். இம்மாதம் தவிர வேறு எப்போதெல்லாம் புனித நீராடலாம் என புராணங்கள் சொல்கின்றன தெரியுமா? அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, இரண்டு அயன காலங்கள், வெள்ளிக்கிழமை, கார்த்திகை, சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் நாட்கள் தான் அவை. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணம் சொல்கிறது. இக்குளத்தில் பிரம்மா, அஷ்டதிக்பாலகர்கள், நவகன்னியரான கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு நதிகள் நீராடி புண்ணியம் அடைந்தன. பவுர்ணமியன்று நீராடுவோருக்கு ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும்.
மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும், அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும். மாசிமக ஸ்நானம் செய்வோருக்கு சிவனும் விஷ்ணுவும் உரிய பலன்தரக் காத்திருப்பர். அன்று புண்ணியநதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்கள் விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும்போது சொர்க்கபேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக்கலாம் என ஈசனே பிரமிப்பார். இந்நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே! மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்தசக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும், உடலும் ஆரோக்கியமாகும். இதை புராணமும், விஞ்ஞானமும் கூறுகிறது.