பதிவு செய்த நாள்
05
மார்
2023
11:03
ஈரோட்டில் இருந்து 12கி.மீ.,தொலைவில் உள்ள தலம் பவானி. பவானி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடம் என்பதால் இங்கு உள்ள இறைவன் சங்கமேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். காவிரி, பவானி,அமுதநதி ஆகிய மூன்று நதிகள் கூடுவதால் முக்கூடல் என்றும் பெயருண்டு. பத்மகிரி, நாககிரி, சங்ககிரி, மங்கலகிரி, வேதகிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இத்தலம் உள்ளது. யாரொருவர் இப்பெருமானை தரிசிக்கும் பேறு பெறுகிறார்களோ அவரைப் பாவம் தீண்டாது. தேவாரப் பாடல்களில் திருநணா என்றே இத்தலம் குறிப்பிடப்படுகிறது. தீமை நண்ணாத ஊர் என்பதே திருநணா. இங்குள்ள அம்மன் வேதாம்பிகை எனப்படுகிறாள். இவள் மீது பக்தி கொண்ட ஆங்கிலேயர் காணிக்கையாக யானை தந்தக்கட்டில் ஒன்றை அளித்தார். குபேரனும், விஸ்வாமித்திரரும், பராசரரும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றனர். இங்கு முருகப்பெருமான் சோமாஸ்கந்தமூர்த்தி கோலத்தில் வீற்றிருக்கிறார். மாசிமகத்தன்று சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகியோரை சூரியன் வணங்குவதாக ஐதீகம்.
தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில் மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.
இந்திரனே ஈசனுக்கு எடுக்கும் விழாவிற்கு இந்திரப் பெருவிழா என்று பெயர். திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத அகோரமூர்த்தி ஆலயத்தில் இவ்விழா மாசி வளர்பிறையில் நடக்கிறது. இதை இந்திரனே நடத்தி வைப்பதாக ஐதீகம். இவ்விழாவில் சுவாமி காவிரி சங்கமத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். இதுவன்றி வாரம்தோறும் ஞாயிறன்று அகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் மட்டுமே ஐந்து முகம் கொண்ட பஞ்சமூர்த்தியாக அகோர சிவன் காட்சி தருகிறார். சோழர் காலத்தில் ஐம்பொன் விக்ரகங்களை உருவாக்கும் தொழிற்கூடமாக இது இருந்துள்ளது. சீர்காழியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.