பதிவு செய்த நாள்
05
ஏப்
2023
10:04
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது சிவபெருமானைக் கல்யாண சுந்தரமூர்த்தியாகக் குறித்து அனுஷ்டிக்கும் விரதம். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நின்று பூரண கலைபெற்று ஏழாமிடமாகிய அங்கிருந்துதான் பூரண கிரணத்தை உத்திர நட்சத்திர குணத்தோடு பூமிக்குக் கொடுத்தலால் இத்தினம் விசேஷமானதாகும். பார்வதி பாகராகிய சிவபெருமானைத் திருமணக்கோலத்தோடு தியானிப்பதாகலின் திருமண விரதம் எனப்படும்.
சிங்கபெருமாள் கோவில்ரயில்வே ஸ்டேஷன் தெருவில், பழமையான சிங்கைசிங்கார வேலன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகிய தினங்களில்,உற்சவர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிர மணியர், புஷ்ப அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் நகர்வலம் வருவதுவழக்கம்.
பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் மங்கல வாத்தியம் முழங்க, முக்கியவீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்து மீண்டும் கோவிலை அடைந்தார். இதில், சிங்கபெருமாள் கோவில், திருக்கச்சூர், திருத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள்பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருக்கரணையில் தேரோட்டம்: சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில், நடுபழநி மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இங்கு, 57ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா நடந்தது. காலை 8.30 மணியளவில், தேரோட்டம் மற்றும் படிவிழா நடந்தது. இதில், பெருக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ளகிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று, வடம்பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான காவடி எடுத்தல் நிகழ்ச்சி, இன்று காலை 8:30 மணிக்கு நடைபெறஉள்ளது.
திருப்போரூரில் காவடி: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனர்.
எலப்பாக்கத்தில் பால் குடம் எடுத்தல்: அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கத்தில், வள்ளி, தேவசேனா உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 35ம் ஆண்டு பால் குடம் எடுத்தல் பெருவிழா விமரிசையாகநடந்தது. நேற்று முன்தினம், காலை 7 மணிக்கு மங்கள இசையுடன், மஹா கணபதி, திருமுறை விண்ணப்பம் மற்றும் சுவாமிகள் ஊஞ்சல் சேவையுடன் திருவிழா துவங்கியது. பின், 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி ஆடியும், முக்கிய வீதிகள்வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.
கூவத்துாரில் அம்பாள் திருக்கல்யாணம்: கூவத்துார் திருவாலீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, நேற்று காலை, திருவாலீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்பாள், விநாயகர், முருகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மாலையில், சுவாமி, அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.