முத்துமாரியம்மன் கோயிலில் சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 05:04
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா முன்னிட்டு வினோதமான முறையில் பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா முன்னிட்டு கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்பு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் மூலவரான முத்துமாரியம்மனுக்கு சிறப்புபூஜை நடைபெற்று குதிரை, யானை, ரிஷபம், அன்னப்பறவை, வெள்ளி குதிரை உள்ளிட்ட வாகனங்களில் அலங்காரம் செய்து வீதிஉலா வந்தது. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் ஊரணி கரையிலிருந்து உடம்பு முழுவதும் சேறு பூசி வேப்பிலை கையில் ஏந்தி வினோதமான முறையில் சேத்தாண்டி வேடம் அணிந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். சுப்பராயலு கூறியதாவது, முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விரதம் இருந்து சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன். இதன் மூலம் உடல் வெப்பம், அம்மை நோய் உட்பட பல்வேறு நோயில் இருந்து காத்துக்கொள்ளப்படுகிறது. உடம்பில் உள்ள நோய்,பிணிகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சி ஏற்படும். இதனால் தொடர்ந்து குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறேன். இதேபோன்று 500க்கும் மேற்பட்டோர் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர்,என்றார். பின்பு பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி,பூப்பெட்டி,கரும்பாலை தொட்டி எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேத்திக்கடன் செலுத்தினர். விழாவில் மதுரை,சென்னை,காரைக்குடி உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்தனர்.