பதிவு செய்த நாள்
09
மே
2023
01:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.
செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 23ஆம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா மற்றும் 14ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, அனுக்ஜை, கணபதி ஹோமம், செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது. மாலை 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரக வீதியுலாவும் நடந்தது. 2ம் நாள் விழாவாக இன்று காலை 9.30 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் பெண்கள் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழா குழுவினர் மகேஷ் விஜய், நாராயணசாமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக நாளை மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 12ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 14 ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.