திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கோட்டை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2023 05:05
மேலுார்: திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று வாஸ்து சாந்தியுடன் திருவிழா துவங்கியது. நாளை (மே 24) கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மே 28 ல் மேலுாருக்கு எழுந்தருள்கின்றனர். இத் திருவிழாவை மாங்கொட்டை திருவிழா என்றழைக்கப்படுகிறது. மே 31 ல் திருக்கல்யாணமும், ஜூன் 1ல் தேரேட்டமும் நடைபெறுகிறது. ஜூன் 2 கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை உதவி, துணை ஆணையர்கள் அருணாசலம், யக்ஞநாராயணன், பேஷ்கார் வெங்கடேசன், கணிக்கர் சீனிவாசன் செய்திருந்தனர்.
புராண வரலாறு : ஆங்கிலேயர் காலத்தில் மேலூரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்து சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூருக்கு செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலூரில் சிவலிங்கம் அமைத்து கொடுத்தும் திருவாதவூர் செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. சிவனடியார் கனவில் தோன்றிய சிவன் நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என கூறியுள்ளார். அதன் பேரில் இன்றும் திருவாதவூரில் இருந்து சுவாமிகள் மேலூருக்கு எழுந்தருள்கிறார். அதனால் தான் இன்றும் மேலுார் நுழைவாயிலில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.