பதிவு செய்த நாள்
24
மே
2023
10:05
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் திமிதி திருவிழா நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் கீழ்கரையில் பிரிசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தொடங்கி வைகாசி மாதம் வரை தீமிதி திருவிழா 25 நாட்கள் நடைபெறும், அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த மாதம் 30-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடை பெற்று வருகிறது. விழாவை யொட்டி தினந்தோறும் பீஷ்மர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மராஜன் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, கிருபச்சாரி பள்ளிக்கூடம், துரோணாச்சாரியார் பள்ளிக்கூடம், திரௌபதி பிறப்பு, திருக்கல்யாணம், அல்ல கல்யாணம், அர்ச்சுனன் தவசு, கர்ணன் மோட்சம், கிருஷ்ணர் உபதேசம், கூந்தல் முடிப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் பால்காவடி, செடல் காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து திரவுபதி அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். முக்கிய விழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. அப்போது பக்தர்கள் சக்தி கரகத்துடன் பெரியகுளம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதில் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.