பதிவு செய்த நாள்
05
ஆக
2023
07:08
சின்னமனூர்: குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் நேற்று பகல் 12.55 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால், நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டு ஜூலை 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரண்டு சனிக்கிழமைகளிலும் திருவிழா நடைபெற்றது. இன்று ( ஆக் . 5 ) மூன்றாவது வாரம் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இதற்கிடையே நேற்று மதியம் சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரங்களுடன் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். சுவாமி கருநீலப்பட்டிலும், அம்மன் பச்சைப்பட்டு சேலையும் அணிந்திருந்தனர். காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்த நிலையில் மதியம் 12.55 மணியளவில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க பகவான், அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் சூடினார். பொதுவாக திருக்கல்யாண நிகழ்வுகள் காலை நேரத்தில் நடைபெறும். ஆனால் சூரியபகவான் மறையும் நேரத்தில் தான் சனீஸ்வர பகவான் தோன்றுவார் என்பதால், பிற்பகல் பொழுதில் திருக்கல்யாணம் நடைபெற்றதாக கோயில் அர்ச்சகர் சிவா தெரிவித்தார். மேலும் இன்று இரவு சக்தி கரகம் எடுத்தல், இரவு 12 மணிக்கு மஞ்சன காப்பு சாத்துதல் நடைபெறும். ஆக. 7 ல் முளைப்பாரி ஊர்வலத்துடன், சக்தி கரகம் கலக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திரளாக பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று ( ஆக. 5 ) 3 வது வாரம் பெருந்திருவிழா என்பதால் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது.