திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தருமபுரம் ஆதீனம் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2023 05:10
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தால் 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்டு நகராட்சி பராமரிப்பில் விடப்பட்ட இலவச மருத்துவமனையை இடிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததற்கு, கண்டனம் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தருமபுரம் ஆதீனம் மடாதிபதி அறிவித்ததால் பரபரப்பு: ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையை 1943 ம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், பிரசவத்தில் இறந்து போன அவரது தாயாரின் நினைவாக ஆதினத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கட்டினார்.
அப்போதைய ஆங்கிலேய கவர்னர் சர் ஆதர் ஜேம்ஸ் ஹோப் என்பவர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.1951 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த மருத்துவமனை தருமபுரம் மடத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகத்துடன் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலைமையில் இயங்கி வந்த மருத்துவமனை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்து குப்பை மேடாக மாறிப் போனது. மீண்டும் தர்மபுரம் ஆதீனத்தில் மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் மீண்டும் இலவச மருத்துவமனை அமைக்கப் போவதாக தற்போதைய தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த வரமாச்சார்யா சுவாமிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதில் வராத நிலையில் அருகில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தை விரிவு செய்து நகராட்சி நிர்வாகம் இலவச மருத்துவமனையை இடித்துவிட்டு அங்கே குப்பைக் கிடங்கு அமைக்கப் போவதாக இன்று செய்திகள் வெளியாகியது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தர்மபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்துள்ள அறிக்கையில், ‛‛இலவச மருத்துவமனையை இடிக்க போவதாக செய்தி வந்துள்ளது அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்துள்ளார்.