பதிவு செய்த நாள்
17
அக்
2023
05:10
திருச்செந்துார்: திருச்செந்துார், கோயில் வாசல் டோல்கேட் கட்டண உயர்வு பிரச்னையால், 10 நாட்களுக்கு மேலாகியும் அரசு பஸ்கள் தொடர்ந்து கோயில் பஸ் ஸ்டாண்டிற்கு வர மறுப்பதால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில் நாழிக்கிணறு பஸ் ஸ்டாண்ட்வரை, அரசு மற்றும் தனியார் பஸ்கள் கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. இதற்காக கோயில் வளாகத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு இரு இடங்களில் டோல்கேட் அமைத்து கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. இதில் அரசு பஸ்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமுறை கடந்த 2017ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த கட்டணமுறை, அரசு பஸ்களுக்கு அதிகமாக இருப்பதாக கூறி, அரசு பஸ்கள் கட்டணமில்லாமல் இயக்கப்பட்டன.
இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களிடம் கட்டாய கட்டணஉயர்வு அமல்படுத்தப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கோயில் வாசல் வரை செல்லாமல் புறக்கணித்து, நகர பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் வரை மட்டுமே பஸ்களை இயங்கி வருகின்றனர். இதனால் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், கோயில் வாசல் வரை செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். கோயிலுக்கு 1 கி.மீ., துாரம் நடந்தே சென்று வருகின்றனர். பலர் ஆட்டோக்களில் கோயில் வாசல் செல்கின்றனர். ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பக்தர்களால் புகார் கூறப்படுகிறது.ரூ.300 வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க, பக்தர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர். தற்போது கோயிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் கோயில் வளாகத்தில் அரசு பஸ்கள் நிறுத்துவதற்கு தனி இடவசதி இல்லாமல் உள்ளது. இதைகாரணம் காட்டியும் அரசு பஸ்கள் கோயில் வாசல் வருவதில்லை. அரசு பஸ்கள் கோயில் வாசல் வரை முந்தைய காலக்கட்டத்தில் சென்று வந்தன. அதிலும், வெளியூரிலிருந்து வரும் இரவு நேர பஸ்கள் பெரும்பாலும் தேரடி பஸ் ஸ்டாப்பில், பயணிகளை நள்ளிரவு இறக்கிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் வெளியூர் பயணிகள் ஆங்காங்கே பரிதவிக்கும் நிலை உள்ளது. நாகர்கோவில் கன்னியாகுமரியில் இருந்து வரும் அரசு பஸ்கள், கோயில் வாசல் செல்வதே கிடையாது. இதில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.