பதிவு செய்த நாள்
18
அக்
2023
03:10
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் மாதப்பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கியது. தருமபுரம் திருவாவடுதுறை ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தங்கி துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக ஐதீகம். காசிக்கு நிகராக போற்றப்படும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் இந்த துலா உற்சவம் நடைபெறும். துலா உற்சவம் மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் என்று தொடங்கியது. இதனை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தெப்பக்குளம் மற்றும் மலைக்கோயில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயில் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் சுவாமி, காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு, காவிரியின் வடக்குக் கரையிலும் எழுந்தருளுனர்.
தொடர்ந்து காவிரி துலா கட்டத்தின் தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையிலும் வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தந்திரம் சுவாமிகள் முன்னிலையிலும் சிவாச்சாரியார்கள்அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி வைத்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் புஷ்கரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேகா சைஸ் தொட்டியில் பம்பு செட் மூலம் தண்ணீர் நிரப்புப்பட்டு இருந்ததுடன் நீண்ட குழாய் அமைக்கப்பட்டு பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது அதில் ஆஸ்திர தேவர்கள் நீராட தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்களும் புனித நீராடினர். தொடர்ந்து இரு கரைகளிலும் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. உற்சவத்தில், அக்.30-ம் தேதி விநாயகர் கொடியேற்றம், நவ.7-ம் தேதி திருக்கொடியேற்றம், நவ.11-ம் தேதி மயிலம்மன் பூஜை மற்றும் அன்றிரவு சகோபுர தரிசனம், நவ.13-ம் தேதி காலை அமாவாசை தீர்த்தவாரி மற்றும் இரவு திருக்கல்யாணம், நவ.15-ம் தேதி திருத்தேர் உற்சவம் ஆகிய முக்கிய உற்சவங்கள் நடைபெற்று, நவ.16-ம் தேதி பிரசித்தி பெற்ற கடைமுகத் தீர்த்தவாரி நடைபெறும். மறுநாள் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெற்று, நவ.20-ல் யதாஸ்தானத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இதேபோல், வதான்யேஸ்வரர் கோயிலில் அக்.18 புதன்கிழமை நாளை மதியம் 2 மணிக்கு துலா மாதப்பிறப்பு தீர்த்தவாரியுடன் தொடங்கும் உற்சவத்தில் நவ.7-ம் தேதி கொடியேற்றம், நவ.11-ல் சகோபுர தரிசனம் நடைபெறும். நவ.13-ம் தேதி அமாவாசையை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் கயிலை வாகனத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சுவாமிகளும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். நவ.13-ல் திருக்கல்யாணம், நவ.15-ல் தேரோட்டம் நடைபெற்று நவ.16-ம் தேதி கடைமுகத் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.