பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2023 03:11
பல்லடம் ; நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருளானந்த ஈஸ்வரர் அருள்பாலித்தார்.
பல்லடம், பட்டியல் வீதி, அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக விழா நடந்தது. ஆன்மீகப் பேச்சாளர் வாவிபாளையம் அனந்த கிருஷ்ணன் பேசியதாவது: பல ஓடைகள் ஓடியதால், இந்த ஊர் பல்லடம் என பெயர் பெற்றது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில். நம் புத்திக்கு அகப்படாத கோவிலாக உள்ளது. அந்த அளவு பழமை வாய்ந்தது. 500 ஆண்டுக்கு முன்பே இக்கோவில் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன. கோவில்களை கட்டி விடலாம். ஆனால், அங்கு ஞானிகள் அருள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஞானியான அருளானந்த சித்தரின் அருள் இக்கோவிலில் உள்ளது. இறைவனின் அருள் என்பது சூரிய ஒளியை போன்றது. எப்போது, யாரால் நற்காரியம் செய்யப்பட வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிப்பார். சிவாலயத்தில் பூஜை இல்லை எனில், ஆட்சி செய்யும் ராஜாவுக்கு தீங்கு ஏற்படும். தொண்டரின் அருளுக்காக நிமிர்ந்தவர் சிவபெருமான். பணம், சொத்து சேர்த்து வைத்தாலும் அவை நிலையானவை அல்ல. ஆனால், எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நாம் செய்த திருப்பணி என்பது நிலைத்து நிற்கும். இறைவன் இல்லாத இடம் இல்லை. அன்போடு நாம் கொடுக்கும். அனைத்தையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்றார்.