பதிவு செய்த நாள்
15
டிச
2023
05:12
புதுச்சேரி, : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டி நவகிரக கோவிலில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணற்றில் தோஷ நிவர்த்தி செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள நவகிரக கோவிலில் விஸ்வரூப சனீஸ்வர பகவான் அருள்பாலிக்கிறார். இங்கு, வரும் 20ம் தேதி நடக்க உள்ள சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், தோஷ நிவர்த்திகள், பரிகாரங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள 27 அடி உயர சனி பகவான் சிலை மற்றும் 54 அடி உயர விநாயகர் சிலையின் உருவங்கள் நல்லெண்ணெயில் பிரதிபலிக்கும் வகையில், எதிரில் பிரமாண்டமான எண்ணெய் கிணறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிதம்பர கீதாராம் குருக்கள் கூறும்போது, நல்லெண்ணெய் கிணற்றின் அருகே நின்று எண்ணெயில் பிரதிபலிக்கும் விநாயகர், சனீஸ்வரர் உருவங்களை தரிசிக்கலாம். பின் தங்கள் முகத்தை பார்த்து, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்தாஷ்டமச்சனி, சிரசு சனி, உடல் சனி, பாத சனி, கண்டச்சனி ஆகியவற்றுக்கு தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த கிணற்றில் இன்று முதல் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி பரிகாரம் மற்றும் தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்றார்.