பதிவு செய்த நாள்
17
டிச
2023
07:12
திருக்கோவிலூர்; கள்ளக்குறிச்சி மாவட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்த கலசம் அனுப்பும் வைபவம் நடந்தது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் இருந்து தீர்த்தம் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்தக்கலசம் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு சந்தப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அட்சதை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இரட்டை விநாயகர், கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, கே.பி.என்., திருமண மண்டபத்தில் 27 கலசங்களில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் தொழிலதிபர் முரளி, அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, பா.ஜ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமை தாங்கி, கலசத்தில் தீர்த்தம் ஆவாகனம், அர்ச்சனை செய்து ஹிந்து முன்னனி புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமாரிடம் வழங்கினார். திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஹோமம், தீபாராதனையை தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சாரதா ஆஸ்ரமத்தின் யதீஸ்வரி சச்சிதானந்தப்ரியா அம்பா அவர்கள் அயோத்தி குழந்தை ஸ்ரீ ராமர் அட்சதை கலசத்தை முக்கியஸ்தர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர்.