பதிவு செய்த நாள்
10
ஜன
2024
05:01
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில், அறங்காவலர் குழு தலைவராக தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் ஐந்து பேர் அண்மையில் நியமிக்கப்பட்டனர். கோவை சாய்பாபா காலனி எம்.எம்.ராமசாமி, காரமடை தேவ் ஆனந்த், மத்வராயபுரம் கார்த்திகேயன், கவுண்டம்பாளையம் சுஜாதா, காரமடை மேடூர் குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேரில் ஒருவரை, அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்க 2 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறாத நிலையில், அதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தலைவரை தேர்ந்தெடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன் படி காரமடையை சேர்ந்த தேவ் ஆனந்தை தலைவராக நியமித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. இன்று காரமடை அரங்கநாதர் கோவில் அலுவலகத்தில் தேவ் ஆனந்த் பதவியேற்று கொண்டார். அவருக்கு கோவை மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். உடன் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் இருந்தார். இந்நிகழ்ச்சியில் காரமடை நகராட்சி தலைவர் உஷா, அட்மா சங்க தலைவர் சுரேந்திரன், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.