பதிவு செய்த நாள்
22
ஜன
2024
08:01
அயோத்தி சந்தோஷத்தாலும், பெருமிதத்தாலும் நிரம்பி வழிகிறது. மிகப்பெரிய திருவிழாவை எதிர்பார்த்து மக்கள் மனசெல்லாம் மத்தாப்பூ பூத்த மகிழ்வுடன் காணப்படுகின்றனர். அயோத்தியில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் வந்தவண்ணம் உள்ளனர்.
துறவியர், மடாதிபதிகள், சாதுக்கள் எல்லாம் மொத்தமாக அயோத்திக்கு வந்துவிட்டதால், அவர்களாலும், அவர்களது பக்தர்களாலும், தொண்டர்களாலும் எங்கும் காவி அணிந்தவர்களின் கூட்டமே காணப்படுகிறது. அவர்கள் எழுப்பும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் விண்ணைப் பிளக்கிறது. ராமர், அனுமன் மற்றும் ராமர் கோவில் உருவம் பொறித்த காவிக்கொடிகள் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. அவரவர் வீடு, கடைகளில் ஒன்றுக்கு இரண்டாக இந்த கொடிகளை ஏற்றி வைத்து பெருமிதம் கொள்கின்றனர். இளைஞர்கள் தங்களது கைகளில் ராமர் படங்களை ஆர்வமாக பச்சை குத்திக் கொள்கின்றனர். சட்டென்று பார்த்தவுடன் சிறிய கோவிலோ என்று எண்ணும்படியாக உள்ளூர் பஸ் நிலையங்களை எல்லாம் ராமர் படங்களால் அலங்கரித்துள்ளனர். பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ கவச வாகனம் உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வாகனங்களின் ரோந்து எல்லா பக்கங்களிலும் நடக்கிறது. டிசம்பர் மாதம் முன்பனி என்றால், ஜனவரி மாதம் பின்பனி என்பர். இப்போது இந்த பின்பனி அதிகமாகவே உள்ளது. காலை, 10:00 மணி வரையிலும் பனிமூட்டம் காணப்படுகிறது. இருந்தாலும் நள்ளிரவில் கூட நகரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவில் பணியில் ஒவ்வொருவரும் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். வருபவர்கள் அனைவருமே ராமரின் அருளை பெற்றுச் செல்லவேண்டும் என்பதால், விழாக்குழுவினர் அதற்கான ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.