பதிவு செய்த நாள்
08
மார்
2024
01:03
மயிலாடுதுறை; மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் சுவாமி கோயிலில் 25ம் ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான அஞ்சல்நாயகி சமேத ஆலந்துறையப்பர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மராட்டிய மன்னன் சரபோஜி அமாவாசை தினத்தன்று பந்தல் அமைத்து சாபதோஷம் நீங்க சிவபூஜை செய்த தலம். இக்கோயிலில் 25-ம் ஆண்டு மகா சிவராத்திரி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில், மன்னம்பந்தல் நடன விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அழகு காவடி எடுத்துச் சென்றனர். யானை, குதிரை ஆகிய மங்கள சின்னங்கள் முன்செல்ல சுவாமி,, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர். இதில், ஏராளமான சிறார்கள் சிலம்பாட்டம் ஆடியபடியும், நாட்டுப்புற கலைஞர்கள் சிவன், அம்பாள் வேடமணிந்தும், சிவகயிலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற வீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகளை அவ்வழியாக சுற்றுலா பேருந்தில் வந்த பிரான்ஸ் நாட்டினர் சிலர் ஆர்வமுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்ததுடன், விபூதி பிரசாதம் பெற்றுச்சென்றனர். தொடர்ந்து, கோயிலில் சுவாமி அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை பாராயணம், பன்னிரு திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், சிவராத்திரியின் நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.