பதிவு செய்த நாள்
08
மார்
2024
01:03
புதுக்கடை; குமரி மாவட்டத்தில், முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து சிவ பக்தர்கள், ‘கோபாலா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் நேற்று சிவாலய ஓட்டம் துவங்கினர். குமரி மாவட்டம் கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார், கல்குளம் தாலுகா பகுதிகளில் தொன்மையும், வரலாற்று சிறப்பும் வாய்ந்த12 சிவ தலங்கள் அமைந்து உள்ளது. இந்த சிவாலயங்களில் சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் தான் ஓட்டமும், நடையுமாக சென்று 12 சிவாலயங்களையும் தரிசிக்கும் சிவாலய ஓட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் கடந்த௭ தினங்களுக்கு முன்பு மாலை அணிந்து விரதம் இருந்தனர்.
சிவராத்திரி: இந்நிலையில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் சிவாலய தரிசனம் துவங்கினர். ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களுடன் தொடர்புடைய முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஓட்டமும், நடையுமாக ‘கோபாலா கோவிந்தா’ என்ற பக்தி கோஷத்துடன் சிவாலய தரிசனம் துவங்கினர். பக்தர்கள் காவி உடை அணிந்து கையில் விசிறி, விபூதி பொட்டலத்துடன், முஞ்சிறையில் இருந்து காப்புக்காடு, சென்னித்தோட்டம், பல்லன்விளை, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்று தரிசித்தனர். பின்னர் திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை கோயில், பொன்மனை மகாதேவர் கோவில், பன்னிப்பாகம் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றும் ஓட்டம்: கல்குளம் நீலகண்டசுவாமியை தரிசித்துவிட்டு அங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள மேலாங்கோடு கோவிலுக்கு சென்று வழிபடுவர். மேலாங்கோட்டில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு கோவில் , திருப்பன்றிகோடு மகாதேவர் கோவிலில் தரிசித்து அங்கிருந்து பள்ளியாடி வழியாக 4 கி.மீ., தூரத்தில் உள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். திருநட்டாலம் கோவிலில் பக்தர்கள் இன்று இரவு முழுவதும் தூங்காநோன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்து, சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சுமார் 110 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள இந்த 12 சிவாலயங்களையும் ஓடியே பக்தர்கள் தரிசிக்கின்றனர்.